சென்னை வங்கி கொள்ளையன் பூபேஷ்குமாரின் சொத்துகளை ஜப்தி செய்தது எஸ்பிஐ... அடுத்த வாரத்தில் ஏலம்!
14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்ற கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினின் வீடுகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கைப்பற்றியுள்ளது.
Recommended Video
சென்னை : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற்று அந்த ஆவணங்களை காட்டியே இதர 13 வங்கிகளில் ரூ. 824 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளார் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின். இவரின் மோசடிகள் அம்பலமான நிலையில் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் ஷ்யூரிட்டயாக பூபேஷ் இணைத்த சொத்துகளை எஸ்பிஐ கைப்பற்றி வருகிறது.
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்தது கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லிமிடெட். தங்க நகைகள் தயாரித்து பெரு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் சிறிய நகைக்கடைகளுக்கு நகைகளை தயாரித்துக் கொடுப்பதற்காக சிறப்பான விளம்பரத்தை செய்துள்ளது.
தொழில் விஸ்திகரிப்பிற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற்ற கனிஷ்க் நிறுவனம், இந்த வங்கியில் பெற்ற கடனுக்கான ஆவணங்களைப் பயன்படுத்தியே இதர 13 வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளது. இந்த கடன் தொகையானது ரூ. 824 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செலுத்தி வந்த கடன் தொகை மற்றும் வட்டியை கடந்த ஏப்ரல் மாதமே பூபேஷ்குமார் ஜெயின் நிறுத்திவிட்டதோடு தனக்கு சொந்தமான நிறுவனங்களையும் மூடிவிட்டார்.
சிபிஐயை நாடிய எஸ்பிஐ
இதனால் வங்கிகள் அதிர்ந்து போயின. இந்நிலையில் பூபேஷ்குமாரிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிபிஐ தலையிடுமாறு உதவி கோரியது. இதனையடுத்து பூபேஷ்குமார், நீதா ஜெயின் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் விசாரணைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சோதனை நடத்திய அதிகாரிகள்
இதனிடையே சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூபேஷ்குமார் ஜெயினுக்கு 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தினர். நள்ளிரவு 1 மணி வரை இந்த சோதனையானது நீடித்திருக்கிறது. இதில் அவருடைய வீடுகளில் இருந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போன்று கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லிமிடெட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் நடராஜபுரத்திலுள்ள க்ரிஸ் ஆலையிலும் சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளது.
ஷ்யூரிட்டி சொத்துகள்
14 வங்கிகளிடம் சில சொத்துகளை ஷ்யூரிட்டியாக பூபேஷ் குமார் ஜெயின் கொடுத்துள்ளார். சுமார் ஓராண்டாக வங்கிகளுக்கு கடன் தொகை பாக்கி இருப்பதோடு வட்டியும் சேர்த்து ரூ. 1000 கோடி நிலுவைத் தொகை இருப்பதால் பூபேஷ் குமார் கொடுத்த ஷ்யூரிட்டி சொத்துகளை கையகப்படுத்தும் பணிகளை வங்கிகள் தொடங்கியுள்ளன. இதன் முதற்கட்டமாக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கையகப்படுத்தியுள்ளது.
வீட்டு முன் நோட்டீஸ்
இந்த வீட்டில் தான் பூபேஷ் குமார் ஜெயின் வசித்து வந்துள்ளார். இன்று காலையில் பூபேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் வீட்டை ஏலம் விடுவதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். செய்தித்தாள்களின் இந்த வீட்டை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.