தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பயம்: ஜாமீனை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. திடீர் மனு!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமது ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.
பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது, டிசம்பர் 18-ந் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
ஏப்.18 வரை ஜாமீன்
இந்த நிபந்தனையின் பேரில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அக்டோபர் 17ம் தேதி வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
தனி பெஞ்ச் அமைக்க உத்தரவு
அத்துடன், ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்சை ஏற்படுத்த வேண்டும். இந்த பெஞ்ச் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஜெயலலிதா தரப்பு தங்களுடைய வாதங்களை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால் மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
ஜாமீன் காலம் முடிவடைகிறது..
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் ஏப்ரல் 18ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்ற திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
தீர்ப்பு பாதகமானால்...
இந்த வழக்கில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மீண்டும் புது வழக்கறிஞரை நியமித்து மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை உருவானால், 18ம் தேதியோடு ஜாமீன் முடிவதால், ஜெயலலிதா மீண்டும் சிறைக்குப் போக வேண்டிய நிலைமை வரும்.
ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு
இந் நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 17ம் தேதியன்று தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற உள்ளது.