4 தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல்: ஜெ.வுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
2001ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புவனகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளிலும் மனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. எம்.பி. செ.குப்புசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, குப்புசாமி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மற்றும் 4 தொகுதிகளில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.