கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் பரிந்துரை
சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படுகொலையால் பாதிக்கப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா பரிந்துரை செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர், 22. இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யாவை காதலித்தார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொலை செய்யப்பட்ட போது பலத்த காயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவ மனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. சிகிச்சை முடிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, சங்கரின் தந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, சங்கரின் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக கவுசல்யா தெரிவித்ததை அடுத்து, போலீஸார் சங்கரின் தந்தை வேலுச்சாமியுடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா பரிந்துரை செய்துள்ளார். மேலும், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பல்வேறு வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும், அதன்படி, பாதிக்கப்பட்டர்களுக்கு நிதி உதவியும், பிற உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.