நக்கீரனுக்கு எதிராக ஜெ., தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த 15 வழக்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
சென்னை: நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த 15 அவதூறு வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நக்கீரன் வார இதழில் வெளியான பல்வேறு செய்திகளுக்காக இதுவரை 15 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு தடை கோரி நக்கீரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனு:
தமிழக முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களைப் பற்றிய செய்தி வரும்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199(2)படி சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் மூலம், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நக்கீரனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499ல் அளிக்கப்பட்ட 2வது விலக்கின்படி அரசு அதிகாரிகளோ, துறை சார்ந்தவர்களோ தங்களது பணி நிமித்தம் வரும் செய்திகளை அவதூறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 199(2)ன்கீழ் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வருவது சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. ஆகவே பத்திரிகையாளர்களுக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்தப்படும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 199 (2) பிரிவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு நக்கீரன் கோபால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்கீரன் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், ராம்சங்கர், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
வழக்கறிஞர் வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதிய செய்தியும் அவதூறு செய்தி என்று வழக்கு தொடரப்பட்டுள்ளதையும், ஒரு செய்திக்காக நக்கீரனில் பணிபுரியும் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த 20 நிருபர்கள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளதையும், சுற்றுலாத்துறை சம்மந்தப்பட்ட செய்தியில் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடாமல் வெளியான செய்திக்காக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளதையும் மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நக்கீரனுக்கு எதிராக ஜெயலலிதாவும், தமிழக அமைச்சர்கள். அதிகாரிகள் தொடர்ந்து நிலுவையில் உள்ள 15 அவதூறு வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்தும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு, வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.