முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா பார்க்கிங் அமைக்க உச்சநீதிமன்றம் தடை!
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மிகப் பெரிய வாகன நிறுத்தம் அமைக்க கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயமும் கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதாடினார். அவர் கூறுகையில் , கேரள அரசு முல்லை பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
மேலும் சிறிய விலங்குகள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்றார். இதை கேட்ட நீதிபதி முல்லை பெரியாறு அணையோரம் வாகன நிறுத்தம் அமைக்க இடைக்காலத் தடை விதித்தார். வாகன நிறுத்தம் விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.