பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : சி.பி.ஐ விசாரணை கோரும் கல்வியாளர்கள்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து கல்வியாளர்கள் சி.பி.ஐ விசாரணை கோரி உள்ளனர்.
சென்னை: தமிழக அரசு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மோசடி நடந்திருப்பதாகவும் இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1058 இடங்களுக்கான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த தேர்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்த தேர்விற்கான முடிவு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் 2200 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும் அரசு சார்பில் தகவல் வெளியானது.
ஆனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சிலரின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பார்த்த போது, தவறாக எழுதப்பட்ட வினாக்களை அழித்துவிட்டு சரியான விடை எழுதப்பட்டு திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் காரணமாக தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வியாளர் பாடம் நாரயணன், பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. இதனால், முறையாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலம் வீணாகி உள்ளது. மேலும், அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மீது இருந்த நம்பிக்கையும் கேள்விக்குரியாகி உள்ளது.
இதனால், இந்த முறைகேடு விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதில் சம்பந்தப்பட்டு உள்ள அதிகாரிகளை அதுவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்.