வண்டலூர் பூங்காவில் மதில் சுவர் இடிந்து தப்பியோடிய புலி- சென்னையில் பெரும் பீதி!!
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மதில் சுவர் இடிந்ததால் புலி ஒன்று தப்பி வெளியே ஓடிவிட்டது. இதனால் சென்னையில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, மான், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் உள்ளன. தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி நேற்று காலை பரவலாக மழை பெய்தது.
இங்கு புலிகள் மற்றும் புலி குட்டிகள் உலாவிடம் அருகே வண்டலூர் மலைப் பகுதி உள்ளது. அப் பகுதியில் 7 அடி அகலமும் 150 அடி நீளமும் கொண்ட சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுச் சுவரின் ஒருபகுதி நேற்று காலை திடீரென விழுந்தது.
இதனை கண்ட பூங்கா ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது புலிகள் இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்ய பூங்கா ஊழியர்கள் இறைச்சியை வீசிப் பார்த்தனர். ஆனால் அங்கிருந்த 5 புலிகளில் ஒன்று கூட இறைச்சியை எடுக்க வரவில்லை.
இதனால் சுற்றுச் சுவர் இடிந்த நேரத்தில் புலிகள் அங்கிருந்து தப்பி அருகே உள்ள காடுகளுக்குள் ஓடிவிட்டது தெரியவந்தது. புலிகள் தப்பியதால் அதிர்ச்சி அடைந்த பூங்கா நிர்வாகம் வனப்பகுதியில் புலிகளைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நிலையில் இன்று காலை தப்பி புலிகளில் 4 பிடிபட்டு மீண்டும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாயமான இன்னொரு புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒருநாள் ஆகியும் புலி சிக்காததால் சென்னை மாநகரில் பீதி ஏற்பட்டுள்ளது.