தேர்தல் விதிகளை மீறி மாணவர்களுக்கு 'அம்மா' படம் போட்ட புத்தகப்பை வினியோகம்: அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடி: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளி மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட புத்தகப்பைகள் வழங்கப்பட்டு வருவது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசு திட்டங்கள், அரசின் உதவிகள் போன்ற எதனையும் செயல்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள், சீருடை, புத்தகப்பை போன்றவை வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆசிரியர்கள் அரசின் புத்தகப் பைகளை வழங்கி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோர்களை கவருவதற்காக ஆசிரியர்களின் துணையுடன் அதிமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புத்தகப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.