தலித் மாணவனை கழிப்பறையை கழுவ வைத்த கொடுமை.. பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது
நெல்லை: நெல்லை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலித் மாணவர் ஒருவரை கழிப்பறை கழுவ வைத்த விவகாரம் தொடர்பாக அப்பள்ளியின் நிர்வாகி மற்றும் 7 ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகில் உள்ள கிழ பத்தையில் அரசு உதவி பெரும் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஹரிதாஸ் என்பவர் மகன் படித்து வருகிறான். சம்பவத்தன்று இம்மாணவரை பள்ளிக் கழிப்பறையைக் கழுவ வைத்துள்ளனர்.
இம்மாணவர் மட்டுமின்றி சமீபகாலமாக அதே பள்ளியில் படித்து வரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 17 மாணவர்களை இவ்வாறு கழிப்பறையைக் கழுவ வைப்பதை பள்ளி நிர்வாகம் வாடிக்கையாக செய்து வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அம்மாணவர்களின் பெற்றோர் கடந்தவாரம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தற்போது தனது மகனை கழிப்பறையைக் கழுவ வைத்தது தொடர்பாக ஹரிதாஸ் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து களக்காடு போலீசார் பள்ளி நிர்வாகி மற்றும் 9 ஆசிரிய,ஆசிரியைகள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் .
பின்னர், பள்ளி நிர்வாகி சாலமன் ஜெபா, ஆசிரியர்கள் சுஜி (எ )மேரி,ஜெயகுமாரி, ஆக்னஸ், ஜேசுவடியான், கெலன், அருள் எமியால்,கேபிகிரபி மற்றும் சரோஜா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டைசிறையில் அடைத்தனர்.
இது தவிர வேலம்மாள் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.