மாணவர்களை ஊக்குவிக்க கலையருவி திருவிழா திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளிக்குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது பள்ளிக்கல்வித்துறை
சென்னை : மாணவர்களின் கலைத் திறமையை ஊக்குவிக்கவும், பாரம்பாரிய கலைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகினறன. தற்போது புதிய முயற்சியாக இந்தாண்டு முதல் புதிய போட்டிகள் 'கலையருவி திருவிழா' என்கிற பெயரில் நடத்தப்பட உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வட்டார அளவிலான 21 போட்டிகளும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 25 போட்டிகளும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு 86 போட்டிகளும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 91 வகைப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இதில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், பறை, களரியாட்டம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் மற்றும் பழங்கால இசை வாத்தியங்களை வாசிப்பது தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி மாவட்டம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். டிசம்பரில் இறுதி போட்டி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கலை போட்டி அறிவிப்புகளால் மாணவ, மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர்.