திண்டிவனம் மாணவி கொலையில் திடீர் திருப்பம்... நகைக்காக சகமாணவியே கொன்றது அம்பலம்!
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், சகமாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாணவி நகைக்காக தோழியைக் கொன்றதாக தெரிய வந்துள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரவி. இவரது மகள் சசிரேகா (14), ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 31-ந் தேதி காலையில் வழக்கம் போல் பள்ளி சென்ற சசிரேகா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சசிரேகாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழியின் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் சசிரேகாவை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆடைகள் கலைந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த சசிரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சசிரேகாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். கொலையாளியை கண்டறிந்து கைது செய்ய கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அளித்த வாக்குறுதியின் பேரில் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சசிரேகாவின் மரணம் தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாயமான போது மாணவி அணிந்திருந்த நகைகள், அவர் சடலமாக மீட்கப்பட்டபோது இல்லாததைக் கண்டுபிடித்தனர்.
எனவே, திருட்டு காரணமாக நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சக மாணவி ஒருவரே சசிரேகாவைக் கொலைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.