சேலத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை - இளைஞர் கைது
சேலம்: சேலத்தில் 14வயது சிறுமியை , இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை சீரழித்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் விராகனூர் பகுதியை சேர்ந்த சிறுமி அருகிலுள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை தனது தோழிகளுடன் விளையாட சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த சிறுமியை கிராமம் முழுவதும் தேடினார்கள்.
இதனையடுத்து, ஞாயிற்றுகிழமை காலையில் கைகள் கட்டபட்ட நிலையில் ஏரிக்கு அருகில் இருந்த அந்த சிறுமியை கிராம மக்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.பிறகு தன்னை அந்த பகுதியில் வாழும் 18 வயது இளைஞர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி அவளது தாயிடம் கூறினார். ஆனால் அந்த இளைஞர் மீது அந்த சிறுமியின் தரப்பிலிருந்து போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திங்களன்று காலை அந்த சிறுமி விஷம் அருந்தினார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவளை ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி வெள்ளிகிழமை காலை உயிரிழந்தார்.இதனையடுத்து அந்த இளைஞர் மீது அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
சிறுமியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.