என்னென்ன பிரார்த்தனைகள்!... எத்தனை வேண்டுதல்கள்!!... தொடரும் அதிமுகவினரின் சோகம்!
சென்னை: முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது அவர் உடல்நலம் பெற்று திரும்ப வரவேண்டி எத்தனை அதிமுகவினர் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.
தீ மிதித்தும், தீச்சட்டி ஏந்தியும் கடவுளை வேண்டிக்கொண்டனர். அவர்களின் பிரார்த்தனை பலித்தது. அமெரிக்காவில் இருந்து உயிரோடு திரும்பியதோடு மட்டுமல்லாது மீண்டும் தமிழக முதல்வராக அவர் பதவி வகித்தார்.
அதேபோன்றதொரு நிகழ்வு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. இம்முறை ஜெயலலிதா சிறை சென்றதால் அதிமுகவினர் கோவில்களில் செய்த யாகங்கள், பூஜைகள், நேர்த்திக்கடன்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி 4 வருடம் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அவருடன் சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைக்கேட்டு அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒப்பாரி வைத்து அழுதனர். ஆளுநர் மாளிகையில் நிகழ்ந்த பதவியேற்பு விழாவில் அழுது அழுது அழுகை மாளிகையாக மாற்றிவிட்டனர் அமைச்சர்கள். கடந்த 27ஆம் தேதி தொடங்கி இதுநாள் வரை பலரும் பலவிட வேண்டுதல்களையும், நேர்த்திக்கடன்களையும் வைத்த வண்ணம் இருக்கின்றனர் அதிமுகவினர்.
முட்டி போட்டு மலை ஏறி
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டி அ.தி.மு.க. பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் என்பவர் மலைக்கோட்டை படிகளில் முழங்கால் போட்டபடி ஏறினார். 400-க்கும் அதிகமான படிகளை அவர் முழங்கால் போட்டபடி ஏறி அவர் ஜெயலலிதாவின் விடுதலைக்காக வேண்டிக்கொண்டார்.
மொட்டை போட்டு துக்கம் அனுஷ்டிப்பு
கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் மத்திய சிறை வளாகத்தின் முன் திங்கள்கிழமை ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, மொட்டையடித்து வேண்டுதலில் ஈடுபட்டனர்.
பாதயாத்திரை
சென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
5ஆம் வகுப்பு மாணவிகள்
பானஸ்வாடியைச் சேர்ந்த ஈஸ்ட் கோஸ்ட் ஆங்கிலப் பள்ளியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி மோனிஷா தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, பரப்பன அக்ரஹாராவில் உள்ள சனீஸ்வரர் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர்.
கடிதம் எழுதிய சிறுமி
தனது வேண்டுதல் குறித்து ஜெயலலிதாவுக்கும் மோனிஷா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சிறைத் துறை அதிகாரிகளிடம் மோனிஷா வழங்கினார்.
காலால் காரை ஓட்டி
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த குமார், இரு கைகளை கட்டிக் கொண்டு காலால் காரை ஓட்டிக் கொண்டு பெங்களூரு மத்திய சிறை வளாகத்திற்கு திங்கள்கிழமை வந்தார். ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து வந்த குமார், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, 4 ஆயிரம் பேரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளார்.
மண்சோறு
இது மட்டுமல்லாது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மண்சோறு சாப்பிட்டு அங்கபிரதட்சணம் செய்தனர்.
தீச்சட்டி ஏந்தி
இளங்காளியம்மன், மாசாணியம்மன், சமயபுரம் மாரியம்மன் என அனைத்து அம்மன் கோவில்களிலும் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர் அதிமுகவினர்.
அன்னதானம்
இது மட்டுமல்லாது சிலர் சாத்வீக முறையில் பால்குடம் எடுத்தும் அன்னதானம் என கொடுத்தும் ஜெயலலிதா விடுதலையாக வேண்டிக்கொண்டனர்.
எதுவுமே பலிக்கலையேப்பா
எத்தனை எத்தனை பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வைத்தும் கடைசியில் எதுவுமே பலிக்கலையேப்பா!