மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - "போஸ்கோ" சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் கைது
தர்மபுரி : பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை, போலீசார், 'போஸ்கோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரியை அடுத்த, மாட்டியாம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமாது என்பவர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தனியார் தொண்டு நிறுவன அமைப்பினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாட்டியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தலைமை ஆசிரியர் சின்னமாது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியின் பரிந்துரையின்படி, சின்னமாதுவை, 'சஸ்பெண்ட்' செய்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீசார், சின்னமாதுவை தேடி வந்த நிலையில், தர்மபுரி காவல் நிலையத்தில், நேற்று சரண் அடைந்தார்.
சின்னமாதுவை, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தொடர்பான, 'போஸ்கோ' சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.