வினாத்தாளை வீட்டிலேயே வைத்துவிட்ட தலைமை ஆசிரியர்.. அரையாண்டு தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்
கிருஷ்ணகிரி அருகே தமிழ் முதல் தாள் அரையாண்டு தேர்வுக்கான கேள்வித்தாளை தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றதால் மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அரையாண்டு தேர்வு தமிழ் முதல் தாள் கேள்வித்தாளை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் தேர்வு எழுத முடியாமல் மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர்.
கிருஷ்ணகிரியை அடுத்த அரசம்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12ஆம் வகுப்புக்கான தமிழ் முதல் தாள் தேர்வு வர்தா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிக்கூடம் திறந்தது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மாணவிகள் தேர்வுக்கு தாயராக வந்திருந்தனர். ஆனால் கேள்வித்தாள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்ற தலைமை ஆசிரியர் அதனை கொண்டு வர மறந்துவிட்டார்.
இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் 161 மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர். தலைமை ஆசிரியரின் மறதியே மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் போனதற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.