அரசு பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் வழங்கினார் ஜெ.,
சென்னை: சென்னை: கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இலவச பாட புத்தககங்கள், சீருடைகள் கல்வி உபகரணங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா 5 மாணவ-மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 22 முதலும் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜூன், 1ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வி துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஆனால், சென்னை உள்ளிட்டதமிழகத்தின் முக்கிய நகரங்களில், கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால், விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த, முதல் ஆய்வு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்ட உடன் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களின் நண்பர்களுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்தனர். இதனையடுத்து வகுப்புகள் வாரியாக மாணவ, மாணவிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டன.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு என 2 கோடியே 30 லட்சம் புத்தகங்களும் 10, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய மாணவ-மாணவிகளுக்கு என 2 கோடியே 10 லட்சம் புத்தகங்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டன.
இந்த பாடப்புத்தகங்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 60 லட்சம் பேர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 35 லட்சம் பேர்களுக்கும் என மொத்தம் 95 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்படுகிறது. 95 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
இந்தப் பொருள்கள் எந்தவிதப் பிரச்னையும் இன்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னதாகவே தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிமாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கும் அன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் 2016-2017ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
5 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், வரலாறு-புவியியல் வரைபடங்கள், பள்ளிக்கு வந்து செல்ல சைக்கிள்கள், சீருடைகள் போன்றவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் பள்ளிக்கு வந்து செல்ல அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. புதிய பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பள்ளிச் சீருடை அணிந்து வந்தாலே டிக்கெட் தேவையில்லை என்று கண்டக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஜூன் 6ம் தேதியும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஜூன் 8ம் தேதியும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.