ஸ்கூல் தாதா டூ ஏரியா பிஸ்தா... வெறும் ஆனந்தன் ரவுடி ஆனந்தன் ஆன கதை!
மிகவும் சிறிய அளவில் தவறுகள் செய்து வந்த ரவுடி ஆனந்தன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து போலீசை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு பெரிய ரவுடியாக மாறியுள்ளான்.
Recommended Video
சென்னை: மிகவும் சிறிய அளவில் தவறுகள் செய்து வந்த ரவுடி ஆனந்தன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து போலீசை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு பெரிய ரவுடியாக மாறியுள்ளான்.
நேற்று இரவோடு இரவாக ரவுடி ஆனந்தன் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டான். போலீசை தாக்கி கொலை முயற்சி செய்தது உட்பட இவன் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது.
தனக்கு முன்னுதாரணமாக பல ரவுடிகளை வைத்துக்கொண்டு தீவிரமாக மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் ரவுடியிசம் செய்துள்ளான். அதன் விளைவாக இப்போது என்கவுண்டரும் செய்யப்பட்டுள்ளான்.
யார் இவர்
சென்னையின் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் வசித்து வந்தவர்தான் ரவுடி ஆனந்தன். அங்கு உள்ள சிட்டி சென்டர் அருகே இருக்கும் உள்ள பி.எம்.தர்கா சாலையில் உள்ள மஞ்சள் குறி என்று அழைக்கப்படும் பகுதியில் வசித்து வந்துள்ளார். 10ம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் அப்போதே பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பள்ளியைவிட்டு வெளியேறி இருக்கிறார்.
ஸ்கூல் தாதா
ஆனந்தன் பள்ளியில் படிக்கும் போதே நிறைய சண்டைகள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் சில மாணவர்களை தாக்கி உள்ளான். இதனால் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அசோகன்-ஜெயலலிதா தம்பதியின் இளைய மகனான ஆனந்தன், பள்ளியில் தாதா ஆனந்தன் என்றுதான் அழைக்கப்பட்டு இருக்கிறான்.
தாதா
அதன்பின் பள்ளியை விட்டுவிட்டு முழுமையாக தொழிலில் இறங்கியுள்ளான். தன் ஏரியாவில் இருந்த சில நணபர்களை சேர்த்துக் கொண்டு, சிட்டி சென்டரை சுற்றி சில சில குற்றங்கள் செய்து வந்துள்ளான். இதில் வழிப்பறி, போன் திருட்டு, கஞ்சா விற்பது, போதை பொருள் விற்பது போன்ற பணிகளையும் செய்து வந்துள்ளான். அவனுடன் எப்போதும் 10 பேராவது இருப்பார்கள் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரோல் மாடல்
படங்களில் காட்டுவது போல இந்த சின்ன ரவுடிக்கு வேறு ஒரு பெரிய ரவுடி ரோல் மாடலாக இருந்துள்ளான். பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணி போலீஸ் ரவுடி வட்டாரங்களில் மட்டுமில்லாமல், பொது மக்களிடமும் பெரிய அளவில் பிரபலம். வாழ்க்கையில் எப்படியாவது வீரமணி போல பெரிய ரவுடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறான். இதனால் வீரமணி சிறு வயதில் செய்த குற்றங்களை எல்லாம் இவனும் வரிசை மாறாமல் செய்துள்ளான்.
பெண்கள் பிரச்சனை
அதில் முக்கியமானது பெண்களுக்கு தொல்லை கொடுப்பது. இவன் ஏரியாவில் இருக்கும் பெண்களை இவன் பெரிய அளவில் துன்புறுத்தி இருக்கிறான். சிட்டி சென்டர் மாலில் இருந்து தனியாக இரவு நேரத்தில் வரும் பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளான். அதேபோல் இரவில் தனியாக இருக்கும் பெண்களிடம் பிரச்சனை செய்து இருக்கிறான். கடைசியாக பெண்களிடம் பிரச்சனை செய்த போதுதான் போலீசுடன் சண்டை வந்தது.
வழக்கு
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் இவன் சின்ன ரவுடியாக இருந்து பெரிய ரவுடியாக மாறியுள்ளான். அந்த பகுதிகளில் இருந்த சின்ன சின்ன ரவுடிகள் எல்லோரு இவன் பேச்சை கேட்டு நடக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் பயனாக கடத்தல், போதை பொருள் விற்பனை, வழிப்பறி என்று மொத்தமாக இவன் மீது 12 வழக்குகள் சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
சீண்டினான்
ஆனால் இத்தனை நாட்கள் அவன் போலீஸ் என்கவுண்டர் லிஸ்டில் சேரும் அளவிற்கு பெரிய குற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டை போலீஸ் ராஜவேலுவை தாக்கிய சம்பவத்திற்கு பின் போலீஸ் இவனை 24 மணி நேரமாக வலை வீசி தேடியது.இவனது நண்பர்கள், அடியாட்கள் என்று மொத்தம் 6 பேரை வெறும் 8 மணி நேரத்தில் கைது செய்தது. கடைசியாக நேற்று இரவு இவனையும் பிடித்தது .
என்கவுண்டர் செய்தனர்
ஆனால் போலீஸ் அவனை பிடித்துவிட்டு அழைத்து வரும் போது கூட, இரண்டு போலீசாரை கத்தியால் தாக்கி இருக்கிறான். அதில் ஒரு ஆய்வாளருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான காயம் காரணமாக நிலை குலைந்த போலீஸ், தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடி ஆனந்தனை என்கவுண்டர் செய்துள்ளனர்.