திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் காவல் நிலையத்தில் சரண்
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியதால் காயமடைந்த அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாபு (52). இவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது அறைக்கு ஆவேசமாக வந்த மாணவன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து காது மற்றும் வயிற்று பகுதியில் காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்ட பாபுவை ஊழியர்கள் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் ஹரிஹரன் பிளஸ் 1 படித்து வருவது தெரியவந்தது.
இவர் வேதியியல் தேர்வின் போது ஹரிஹரன் காப்பி அடித்த போது அவரை தலைமை ஆசிரியர் பாபு பிடித்துவிட்டார். இந்த வஞ்சத்தை மனதில் வைத்துக் கொண்டு பாபுவை மாணவன் குத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் ஹரிஹரன் இன்று மாலை சரணடைந்தார்.