நம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100% செயல்படும்.. அப்ளாஸ் வாங்கும் மாணவி நதியாவின் கடிதம்!
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, 11 வயது மாணவி நம்பிக்கை தரும் கடிதம் எழுதி உள்ளாள்.
Recommended Video
தேவகோட்டை: "நம்பிக்கையா இருங்க.. விக்ரம் லேண்டர் 100 சதவீதம் செயல்படும்.. உங்கள் உழைப்பு வீண் போகாது" என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது மாணவி நதியா எழுதிய கடிதம் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கிறது.
எத்தனையோ உழைப்பு, எதிர்பார்ப்புகளையும் தாண்டி, - சந்திரயான் - 2 திட்டமிட்டபடி, நிலவில் தரை இறங்க முடியாமல் போனது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.
இதனால் லேண்டரின் நிலை குறித்தும், தகவல் தொடர்பை மீண்டும் செயல்படுத்தவும், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
விஞ்ஞானிகள்
இந்நிலையில், 11 வயது சிறுமி ஒருத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், தன்கைப்பட உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதி இருக்கிறாள். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவி நதியாதான் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறாள்.
வருத்தம் அடைந்தேன்
அந்த கடிதத்தில் "சந்திரியான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான். சந்திரியான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என்றும்,பின்பு விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன். ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
பிரார்த்தனை
பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரியான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள்.இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும்,கடின உழைப்பும், எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.
வைரல் கடிதம்
விக்ரம் லேண்டருக்கு எந்த வித சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான்.முயற்சி திருவினையாக்கும்.கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் , 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பகிரவும், நதியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.