ஏன் சார் ஸ்கூலுக்கு லேட்டு? பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பு!
பள்ளிக்கு உரிய நேரத்தில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராததால், மாணவ-மாணவியரே பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவில்லிப்புத்தூர் அருகே உள்ள ஊர் சின்ன அத்திக்குளம். இங்கே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாம். ஆனால் இதில் 21 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளியின் வேலைநேரம் காலை 8.45 முதல் மாலை மணி வரையாகும். ஆனால் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லையாம். தினமும் காலை 11 மணிக்குதான் வருவார்களாம். இப்படியே ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை சொல்லியுள்ளனர். பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் சென்று உரிய நேரத்துக்கு பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
பள்ளிக்குப் பூட்டுப் போட்டு போராட்டம்
ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் வகுப்புக்கு தாமதமாகவே சென்றுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து போராட முடிவெடுத்தனர். அதன்படி, பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளி முன்பு அமர்ந்துவிட்டனர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் இறங்கியுள்ளதை அறிந்த ஆசிரியர்கள் அனைவரும் அவசர அவசரமாக பதறியடித்து வந்தனர். இனியாவது மாணவர்கள் நலன்கருதி சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருமாறு பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
ஆச்சரியமாக இருக்கிறதே
ஸ்கூலுக்கு ஏன் லேட்டு-ன்னு ஆசிரியர்கள் மாணவர்களை கேட்ட போய், மாணவர்கள் ஆசிரியர்களை கேட்கும் நிலை வந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசின் நியமனப்படி 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கு உள்ளது. ஆனால் இங்கு இருப்பதே 21 மாணவர்கள்தான். அவர்களுக்கு 5 ஆசிரியர்கள் இருந்தும் உரிய நேரத்தில் வந்து ஏன் பாடம் நடத்துவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
குவியும் புகார்கள்
சமீபகாலமாக மாணவர்களைவிட ஆசிரியர்களிடமிருந்தே அதிக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆரணி அருகே ஒரு பள்ளியில் பூ, பொட்டு வைத்த மாணவிகளுக்கு தண்டனை, பள்ளிக்கு மது அருந்திவிட்ட ஆசிரியர்... என புகார் பட்டியல் நீண்டு வருகிறது. மாணவர்களோ... காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தை உலுக்கும் பிரச்சினையை கையாள ஆரம்பித்துவிட்டனர். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் இனியாவது, தங்களை மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்காமல் நடந்துகொள்ள வேண்டும்.
இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பதா
ஏற்கனவே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 10 மடங்குக்கும் குறைவாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இது மக்கள் அரசு பள்ளிகளின்மேல் நம்பிக்கை இழந்து விட்டதையே காட்டுகிறது. அப்படி இருந்தும் தமது குழந்தைகளை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தால், ஆசிரியர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.
அரசு பள்ளி மூலம்தான் அறம் சார்ந்த கல்வியை போதிக்க முடியும். எனவே தமிழக அரசு உடனடியாக அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பு மாணவர்களும் அரசு பள்ளியை தேடி வந்து சேரும் நிலை ஏற்படும்.