உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்
இஸ்ரோ விஞ்ஞானிகளை பள்ளி குழந்தைகளை கை தட்டி வரவேற்றனர்
தேவகோட்டை: உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம் அனுப்பிய நம்ம விஞ்ஞானிகளுக்கு தேவகோட்டை பள்ளி குழந்தைகள் கை தட்டி, ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சில வருடங்களாகவே பள்ளி குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி கொண்டு வருவது சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிதான்.
இயற்கை சீற்றத்துக்கு உண்டியல் குலுக்கி வசூலித்து பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவார்கள் இந்த பள்ளி குழந்தைகள். அது சொற்ப பணமே ஆயினும், இதற்கெல்லாம் காரணம், அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான்.
அதன்படி இன்று நம் விஞ்ஞானிகள் ரூபாய் 1000 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்தினார்கள். பொதுவாக செயற்கை கோள் பற்றிய முழு விவரங்களும் பள்ளி குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பிருக்காது. இருந்தாலும், நம் விஞ்ஞானிகளின் சாதனை, பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் எடுத்து சொன்னார் சொக்கலிங்கம்.
இதையடுத்து, இதுவரைக்கும் எந்த நாட்டுக்காரர்களுமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-2 செல்வது பற்றி பொறுமையாக விளக்கினார். அதன் சிறப்பையும் மாணவர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்கள் கை தட்டி பாராட்டினார்கள். கலர் கலர் பலூன்களை பறக்கவிடப்பட்டும் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.
முன்னதாக காலை வழிபாட்டு கூட்டத்திலும் சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் செல்ல வேண்டி மாணவர்கள் பிரார்த்தனையும் செய்தனர்.