வர்றதே இல்லை.. இந்த கணக்கு வாத்தியார் வேண்டவே வேண்டாம்... பள்ளி மாணவர்கள் போராட்டம்!
கணக்கு வாத்தியாரை மாற்றக்கோரி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி: திருத்தணி அருகே கணக்கு வாத்தியாருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே தும்பிகுளம் என்ற பகுதி உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் நலனில் அக்கறை உடையவர்கள். இதனால் ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையே நல்ல உறவு பாலம் இருந்து வந்தது.
ஆனால் கணக்கு வாத்தியார் என்றால் மட்டும் பள்ளி மாணவர்கள் மொத்த பேரும் அலறுகின்றனர். காரணம் இவர் வகுப்புக்கு ஒழுங்காக வருவதே கிடையாதாம். இது இப்போது இல்லை. கடந்த ஆண்டிலிருந்தே இந்த வாத்தியார் இப்படிதானாம். இதனால் அவரை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சரிவர வகுப்புக்கு வரவில்லையாம். இதனால் அவரை இடமாற்றம் செய்து விடுங்கள் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், திருத்தணி உதவி தொடக்க கல்வி அலுவலரிடமும் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்த மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கணக்கு ஆசிரியரை இடமாற்றம் செய்யப்படுவார் என்று உறுதியாக சொன்னார்களாம்.
இந்நிலையில், இந்த வருடம் பள்ளி திறந்ததும் மாணவர்கள் வகுப்புக்கு செல்ல ஆரம்பித்தனர். நமக்கு புது வாத்தியார் வரப்போகிறார் என்று காத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி.. குற்றம் சாட்டப்பட்ட அதே கணக்கு வாத்தியார் வகுப்புக்குள் நுழைந்தார். இதனால் மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் இதைபற்றி கூறினர்.
இதையடுத்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். கணக்கு வாத்தியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேராக பள்ளி முன்பு போய் நின்றுகொண்டு போராட்டத்தில் ஈடுபட துவங்கிவிட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுவாக கணக்கு பாடம் என்றாலே சில மாணவர்களுக்கு வேப்பங்காய்தான். அதிலும் உயர்நிலை பள்ளி கணக்கு பாடங்களை போதிய கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி இருக்கும்போது, கணக்கு சொல்லிதரும் ஆசிரியரே சரிவர பள்ளிக்கு வராமல் இருந்தால் மாணவ, மாணவிகள் எப்படி தேர்ச்சி பெற முடியும்? இதனை உணர்ந்து மாவட்ட கல்வி நிர்வாகம் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு நல்வழிப்படுத்தும் கணக்கு ஆசிரியரை நியமிப்பது உடனடி அவசியம்.