பழனி ஆசிரியை கொலையில் திடுக் தகவல்.. ஒரு தலை காதலால் அண்ணன் முறை கொண்டவர் வெறிச்செயல்!
பழனியில் தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திண்டுக்கல்: பழனியில் தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி - லட்சுமி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு பவித்ரா, மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர்.
பி.ஏ. படித்துள்ள பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இளைஞர் வாக்குவாதம்
நேற்று முன்தினம் மாலை இவர், கோவிலுக்கு சான்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். ரோட்டில் இரவு சுமார் 7.30 மணி ஒரு இளைஞரை சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் 2 பேரும், முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் அடிவாரம் நோக்கி சென்றனர். ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பவித்ராவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
அலறிய பவித்ரா
பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ சென்றபோது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் அச்சமடைந்த டிரைவர் முத்துராமலிங்கம் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.
ரத்த வெள்ளத்தில் பவித்ரா
இதனையடுத்து அந்த வாலிபர், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் கதறினார். அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த வாலிபர், பவித்ராவின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.
மதுரையில் மேல் சிகிச்சை
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை மரணம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மில் தொழிலாளி மாயவன்
முதற்கட்ட விசாரணையில், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளியான மாயவன் (26) என்பவர் பவித்ராவுடன் நேற்று முன்தினம் இரவு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
அண்ணன் உறவுமுறை கொண்டவர்
பவித்ராவை பிளேடால் கழுத்து அறுத்து கொன்றது மாயவன் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மாயவன் பவித்ராவுக்கு அண்ணன் உறவுமுறை கொண்டவர் ஆவார். அவர் பவித்ராவின் பெரியம்மா மகன் ஆவார்.
தங்கை மீது ஒருதலை காதல்
கடந்த சில ஆண்டுகளாக அவர் பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பவித்ராவிடம் அவர் அதுகுறித்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
காதலை ஏற்க மறுத்த பவித்ரா
இதையறிந்த மாயவன் பவித்ராவிடம் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரை தனிமையில் சந்தித்த மாயவன், தனது காதலை பவித்ராவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை பவித்ரா ஏற்கவில்லை என தெரிகிறது.
காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்
இதையடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி பவித்ராவை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாயவன் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
மாயவனிடம் விசாரணை
இதற்கிடையே நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக பழனி பஸ் நிலையம் வந்த மாயவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.