கனமழை... சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வட மாவட்டங்களில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக, தென் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை தொடர்வதால் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.