சென்னை, காஞ்சி, திருவள்ளூர், புதுவை, காரைக்காலில் டிச. 6 வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதிவரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல புதுச்சேரியிலும், காரைக்கால் மாவட்டத்திலும் டிசம்பர் 6வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கன மழை நீடிப்பதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்தாலும், உடனடியாக மழை குறைய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளநீரால் மக்கள் தவித்து வருகின்றனர். பல பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. பல பள்ளிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர், விழுப்புரம் மற்றும் நாகையில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.