வழக்கம் போல் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டின் அடையாள சின்னமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நிரந்தரமாக நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் இரவு பகல் பாராது ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அவசர சட்டம் பிறப்பித்தார். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரமாக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் இளைஞர் பட்டாளம்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.