தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு முதலே குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. கனமழை ஒருபுறம் என்றாலும் பலத்த சூறைக்காற்றால் பல ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன.
தொடர் கனமழை மற்றும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மின்சாரமும் தடை பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் உத்தரவிட்டுள்ளார்.