பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க கல்வித்துறை உத்தரவு
நாகர்கோவில்: தமிழக பள்ளிகளில் உள்ள கிணறுகளை எல்லாம் மூடி வைக்க வேண்டு்ம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாணவ, மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி வாளகத்தில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும். பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவ, மாணவியர் பாதுகாப்பு இன்றி செல்ல கூடாது. பள்ளி வாளகத்தில் உள்ள மின் சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளி நேரம் முடித்த பின்னர் வகுப்பறையை விட்டு அனைத்து மாணவர்களும் சென்று விட்டதை உறுதி செய்த பின்னர் வகுப்பறை மற்றும் பள்ளியை பூட்டி விட்டு செல்ல வேண்டும்.
பள்ளிகளில் முதலுதவி செய்யும் வகையில் பயன்படுத்த கூடிய நிலையில் உள்ள அனைத்து மருந்து பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருந்தல் வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் பள்ளியில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.