பள்ளி திறந்த முதல் நாளே பாட புத்தகம் தரவில்லை.. மாணவர்கள் ஏமாற்றம்
நெல்லை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் பாடபுத்தகம் வழங்கப்படாததால் நெல்லை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவி்க்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து சென்றனர். இந்நிலையில் வெயில் வறுத்தெடுப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழக அரசு திட்டமிட்டப்படி ஜுன்-1ம் தேதி பள்ளியை திறந்தது.
மாணவ, மாணவிகள் புதிய கல்வி ஆண்டை உற்சாகத்துடன் எதிர்கொள்ள நேற்று பள்ளிகளில் திரண்டனர். பலர் கோடை விடுமுறை முடிந்த வந்த தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் இறை வணக்கத்துக்கு பின்னர் பொது பாடம் மற்றும் நீதி நெறி குறித்த வகுப்புகள் நடந்தது.
பள்ளிகள் திறந்த அன்றே பாட புத்தகம் வழங்க வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளி திறப்புக்கு முதல் நாள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திடீரென பாட புத்தகங்களை வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாள் பாட புத்தகம் வழங்கப்படவில்லையாம். மேலும் சில பள்ளிகளுக்கு பாட புத்தகம் முழுமையாக போய் சேரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாட புத்தகம், நோட்டு, சீருடைகள், காலணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.