கொளுத்தும் வெயில்... புதுவையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் தேதி பள்ளி திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் தேதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக ஜூன் மாதம் 6 ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அந்த மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது
இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் துவங்கும் நாள் ஜூன் 6-ம் தேதி (திங்கள்கிழமை) ஆக மாற்றி அறிவிக்கப்படுகிறது.
மேலும் இடைப்பட்ட இவ்விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என குமார் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.