தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்க சிறப்பு ஏற்பாடு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான இலவசப் பொருட்கள் இன்றே வழங்க பள்ளிக் கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 22ஆம் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்ரல் 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால் விடுமுறை காலம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, இன்றே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் வெயில் காரணமாக பாதிப்பு இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களே முடிவு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. புதுச்சேரியில் வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலையில் , வெயிலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்தார்.
ஆனால் அந்த அறிவிப்பு சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இன்றே திருவண்ணாமலையில் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மேலும், இறை வணக்க கூட்டம் இனி தினமும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை அடுத்து பள்ளி திறக்கும் முதல் நாளான இன்று, காலையில் 17 நிமிடம் இறை வணக்க கூட்டம் நடக்கும்.
தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் காலை 9 மணிக்கு பள்ளி தொடங்கும். 9.10 மணிக்கு இறை வணக்கம். 9.27க்கு பிறகு வகுப்பு தொடங்கும். மாலை 3.55க்கு பள்ளி முடிவடையும். உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் பணி நேரம், காலை 9.15 மணிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். 9.30 மணிக்கு இறை வணக்க கூட்டம் நடக்கும். 9.45 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலை 4.35 மணிக்கு பள்ளி முடியும்.