காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு... உற்சாகமாக கிளம்பிய மாணவர்கள்
தமிழகம் முழுவதும் பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. 10 நாட்கள் விடுமுறை முடிந்து மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பி சென்றனர்.
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி தொடர்விடுமுறைகள் முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 2ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாகம் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான 2ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் 10 நாட்கள் விடுமுறை
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்டம்பர் 22ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது.
பள்ளிகள் திறக்கப்பட்டன
10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை பிரித்து அனுப்பி வைத்தனர். இன்று பள்ளி திறக்கும்போது, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் பருவ புத்தகங்கள்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான 1.23 கோடி பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்பட உள்ளது.
டெங்குவை தடுக்க நடவடிக்கை
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதை முன்னிட்டு பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.