விக்ரம் சாராபாய் விண்வெளி இயக்குநர் கே.சிவனுக்கு பிடித்த பாடல்கள் எது தெரியுமா?
உன்னை அறிந்தால்.... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்... வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் பாடும் இந்தப்பாடல் விக்ரம் சாராபாய் விஞ்ஞானி கே.சிவன் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாம்.
திருவனந்தபுரத்தில் உள்ள டாக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக பதவி வகித்து வரும் கே.சிவன் ஒரு தமிழர் என்றால் நம்ப முடிகிறதா? மலையாளிகள் மட்டுமே ஆட்சி செய்யும் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் பதவியில் அமர்ந்திருக்கிறார் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த கே.சிவன் மிக உயரிய பதவியை வகித்து வருகிறார்.
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். டாக்டர் அப்துல் கலாமைப் போல விஞ்ஞானியாகவேண்டும் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் ஆசைப்படுகின்றன. அறிவியல் படித்து சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளை உலகறியச்செய்யும் வகையில் இன்றைய சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கே.சிவன் அழைக்கப்பட்டிருந்தார்.
சன்டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சினிமா, சின்னத்திரை, டாக்டர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இன்றைக்கு விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ராக்கெட் தொழில் நுட்பம் பற்றியும், தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மீடியம் பள்ளியில் படித்து இன்றைக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இயக்குநராக உயரக்காரணம் தன்னுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணம் என்றார்.
விஞ்ஞானியாக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த டாக்டர் அப்துல்கலாம் ஒரு எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். விஞ்ஞானி கே.சிவன் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பழைய பாடல்களை கேட்பேன் என்று கூறினார்.
"உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்"... என்ற எம்.ஜி.ஆர் பாடிய பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன் என்றார் சிவன். தொடர்ந்து அவர், "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?" என்ற பாடல் பணிபுரியும் இடங்களில் நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் பற்றி உணர்த்தும் அற்புதமான பாடல் என்றும் கூறினார்.
விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து ஏவப்படும் ராக்கெட் திசைமாறி கடலில் விழும்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு அவர், அப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்றுதான் அனைவரும் நினைப்போம், அதையும் மீறி ராக்கெட் கடலில் விழ நேரிட்டால், எங்கு தவறு நேர்ந்துள்ளது என்பதை ஆராய்வதோடு விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல் கூறுவோம் என்றும் தெரிவித்தார் இயக்குநர் சிவன்.
விஞ்ஞானியின் கே.சிவன் பேட்டி நாளையும் ஒளிபரப்பாகிறது மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் வருத்தப்படுவீங்க...