பழைய டிவி, ஏசி- க்கு ‘பேரீச்சம்பழம்’.... வெள்ளம் பாதித்த சென்னையில் வேன்களில் சுற்றும் வியாபாரிகள்!
சென்னை: சென்னையில் வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்த பகுதிகளில் பழைய ரிப்பேரான டிவி, ஏசிக்களை வாங்குவதற்கென்றே வியாபாரிகள் பலர் வேன்களில் சுற்றி வருகின்றனர்.
சென்னையில் இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முதல் மாடி வரை தண்ணீர் எட்டிப் பார்த்ததால், கீழ்த்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி பாழாயின.
டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கெட்டுப் போன மின்சாதனப் பொருட்கள்...
பல இடங்களில் இரண்டு நாட்களுக்கும் மேலாக நீர் வடியாமல் இருந்தது. இதனால் நீரில் ஊறிய மின்பொருட்கள் திரும்ப சரி செய்ய இயலாத அளவிற்கு கெட்டுப் போயுள்ளன.
பொருளாதாரச் சிக்கல்...
ஏற்கனவே சேமிப்புகளை இழந்து துயரத்தில் வாடும் மக்கள், உடனடியாக அவற்றைக் கொண்டு போய் கடைகளில் போட்டுவிட்டு, புதிய பொருட்கள் வாங்குவதற்குரிய வசதி , வாய்ப்புகள் இல்லை.
வேனில் சென்று...
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள், வேனில் வீடு வீடாகச் சென்று பழையப் பொருட்களை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
கைச்செலவிற்கு உதவும்...
ஸ்பீக்கரில், ‘நீரில் ஊறிய டிவி, ஏசிக்கள் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்ற அறிவிப்புடன் அவர்கள் ஊருக்குள் சுற்றி வருகின்றனர். ஏற்கனவே மழை காரணமாக வருமானத்தை இழந்துள்ள மக்கள், கைச் செலவிற்காவது பயன்படட்டும் என அவற்றை விற்பனை செய்து விடுகின்றனர்.
இலவசமாக...
முன்பு பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களைக் காசு கொடுத்துப் பெற்று வந்த வியாபாரிகளும் இப்ப ரொம்பவே பிசி. வீடுகளை சுத்தம் செய்யும் மக்கள் எப்படியோ குப்பை ஒழிந்தால் சரி என பழையப் பொருட்களை எடுத்து வெளியில் குவித்து வைத்துள்ளனர்.
காசுக்கு நோ...
எனவே, பேரம் எதுவும் பேசும் சிரமமின்றி அவற்றை இலவசமாக எடுத்துச் செல்கின்றனர் இந்த பழைய பேப்பர் வியாபாரிகள். இதனால், மேல்தளத்தில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் பேப்பர்களைப் போட அழைத்தாலும், இவர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பழைய பட்டுப்புடவைகள்...
இதேபோல், வீதிகள் தோறும் பழைய பட்டுப்புடவைகள் மற்றும் உடைகளை வாங்குவதற்கும் வியாபாரிகள் வேன்களில் உலா வருகின்றனர்.
புதிய வியாபாரிகள்...
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த புதிய வியாபாரிகளைப் பார்க்க முடிகிறது. இதனால், வழக்கமாக இந்தப் பகுதியில் பழைய பொருட்களை வாங்க வரும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
கஷ்டகாலம்...
பழைய இரும்பு, பிளாஸ்டிக்கிற்கு பேரீச்சம்பழம் விற்ற காலம் போய், நீரில் ஊறிய பழைய டிவி, ஏசி இருக்கா, காசுக்கு எடுத்துக் கொள்ளப்படுக்கப்படும் என்ற அறிவிப்புகளைக் காதில் கேட்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.