ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு.. தமிழகத்தில் அதிமுக செல்வாக்கு சரிந்தது: தெஹ்லான் பாகவி
நெல்லை: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தவறு செய்து விட்டதாக எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாகவி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் எஸ்டிபிஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்ட பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஓலிபெருக்கிகளை வைக்க போலீசார் கடும் கட்டுபாடு விதிக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை.
அரசியல் கட்சி கூட்டங்களில் அதிக அளவிலான ஓலி எழுப்பக்கூடிய ஓலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் இந்த கட்டுபாடுகள் விதிப்பது ஏற்புடையது அல்ல.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக 3 பிரிவுகளாக பிரிந்து பாஜக ஆதரவு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அதிமுகவை சேர்ந்த மூன்று பிரிவுகளும் பெரும் வரலாற்று பிழையை செய்துள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக களம் இறங்கி இருந்தால் தமிழகத்தில் அதிமுகவுக்கு பலம் பெருகி இருக்கும். அதை விட்டு விட்டு அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டது மூலம் தமிழக மக்களிடம் செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.