இஸ்லாமிய மதவாதக் கட்சி எஸ்டிபிஐ.. உளறிக் கொட்டிய கருணாஸ்
சென்னை: நடிகரும் திருவாடனை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அரசியல் கட்சியான எஸ்டிபிஐ கட்சியை இஸ்லாமிய மதவாதக் கட்சி என்று உளறிக் கொட்டினார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து வாக்களித்த 122 எம்எல்ஏக்களில் திருவாடனை எம்எல்ஏவான கருணாஸ்சும் ஒருவர். அவரை சும்மா விடுவார்களா மக்கள்? வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இதனால் காதில் இருந்து ரத்தம் வழியும் கருணாஸ், இன்று தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகம் வந்து புகார் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், விஜயகாந்த் பேசும் வசனம் மாதிரி என்னை எதிர்த்து போட்டியிட்ட ஜான் பாண்டியன் 9 ஆயிரம் சில்லறை, என்னை எதிர்த்து போட்டியிட்ட இஸ்லாமிய மதவாத எஸ்டிபிஐ கட்சி 7 ஆயிரத்து சில்லறை என வரிசை கட்டினார்.
எஸ்டிபிஐ கட்சி அரசியல் ரீதியாக பொதுமக்களிடம் வேலை செய்யும் ஒரு கட்சி. அது எந்த இடத்திலும் இதுவரை மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அல்லது தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அந்தக் கட்சியை இஸ்லாமிய மதவாதக் கட்சி என்று கருணாஸ் சொல்லிவிட்டு அப்புறம் டாமல் என்று எஸ்டிபிஐ கட்சி மாற்றி பேசினார்.