பால் விலையேற்றத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னையில் முற்றுகை போராட்டம்!
சென்னை: மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், விலையேற்றத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் கார்ப்பரேட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் காஞ்சி பிலால் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், தென்சென்னை மாவட்ட தலைவர் ஜமால், மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், வடசென்னை மாவட்ட தலைவர் ரஷீத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நந்தனம் தேவர் சிலை அருகிலிருந்து சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டவாறு வந்து ஆவின் கார்ப்பரேட் நிறுவனத்தை முற்றுகையிட்டு விலையேற்றத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் பிலால், "சென்னை உள்ளிட்ட பெருநகர மக்கள் பாலுக்காக முழுவதும் சார்ந்திருப்பது அரசின் ஆவின் நிறுவனத்தையே ஆகும். சாதாரண நடுத்தர மக்கள் முதல் அனைத்து மக்களும் ஆவின் பாலை நம்பியிருந்த நிலையில், லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பால் கொள்முதல் விலையேற்றத்தை காரணங்காட்டி இந்த அநியாய விலை உயர்வினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட உயர்வை விட இருமடங்கு அதிகமாகும்.
ஏற்கனவே முறைகேடு, கலப்படம் போன்றவை மூலமாக பல நூறு கோடி இழப்பு மற்றும் மக்களின் நம்பிக்கையை ஆவின் நிறுவனம் இழந்திருந்தது. இழந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாகவும், நிர்வாக அமைப்பை சீர்படுத்தும் நடவடிக்கையும் எடுப்பதற்கு பதிலாக இத்தகைய வரலாறு காணாத விலை உயர்வு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த பால் விலை உயர்வை தொடர்ந்து பால் தொடர்புடைய 17 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையும் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. மேலும் உணவகங்களில் டீ,காபியின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து உணவுகளில் விலை குறைந்த பாலின் மூலம் ஏழைக் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் பலனடைந்த நிலையில், இந்த அநியாய உயர்வு அவர்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்திய குழந்தைகளில் 46 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக உள்ளனர் என சர்வதேச ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 2015 ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து குறைபாட்டை பாதியாக குறைக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்க்கொள்ள வேண்டும் என ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைக்கும் நிலையில், இத்தகைய பால் விலை உயர்வு அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே தமிழக அரசு ஆவின் பால் விற்பனையை லாபம் தரும் நிறுவனமாக கொண்டு செயல்படுத்தாமல், மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விற்பனையை சேவையாக கருதி, உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பால் கொள்முதல் விலையேற்றத்தை அரசே மானியமாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என்றார்.
இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.