பூரண மதுவிலக்கு - ஆயுள் சிறைவாசிகள் விடுதலை.. எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம்
சென்னை: தமிழகத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும், அவர்களின் ஜாதி, மதம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக சென்னை மின்ட் தங்க சாலையில் மாபெரும் இரட்டை கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரபீக் அகமது, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் தோழர் தியாகு, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தனது உரையின் போது, பூரண மதுவிலக்கு கோரிக்கையும், 10 ஆண்டுகள் சிறை அனுபவித்த அனைத்து ஆயுள் கைதிகள் விடுதலை கோரிக்கையும் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடிவருகிறது.
இதே போன்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர். இதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசு நினைத்தால் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் இந்த இரண்டு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியும்.
ஆனால், தமிழக அரசு முரட்டு மவுனம், பிடிவாதம் காட்டி வருகின்றது. இந்த அரசின் ஆயுட்காலம் இன்னும் இரண்டொரு மாதங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால், மேற்சொன்ன இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு இனிமேலும் செவிமடுக்க மறுத்தால், அதற்கான விடையை மக்கள் எதிர்வரும் தேர்தலில் எதிரொலிப்பாளர்கள் என்றார்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், சாமுவேல் பால், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், விமன் இந்தியா அமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சாகிரா, வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜா முகமது, எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் பூட்டோ சாகுல், மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரட்டைக் கோரிக்கை பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.