ஆந்திரா, தெலுங்கானா போலி என்கவுண்ட்டர்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சென்ட்ரலில் ரயில் மறியல்
சென்னை: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்ட்டர்களைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை சென்ட்ரலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை வெட்டினார்கள் என்று கூறி 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் காட்டுமிராண்டிதனமாக படுகொலை செய்தனர். இதேபோல் தெலுங்கானாவில் 5 முஸ்லிம்களை தெலுங்கானா காவல்துறை சுட்டுக்கொலை செய்தது.
இந்த இரு போலி என்கவுண்ட்டர்களுக்கு நீதி விசாரணை கோரியும், மத்திய அரசு இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை வகித்தார். மேலும் மாநில செயலாளர்கள் எஸ்.அமீர் ஹம்சா, டி.ரத்தினம், எஸ்.முகம்மது பிலால் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு கைதாகினர். அப்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.