சேலம்: கருக்கலைப்பு செய்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் வீட்டிற்கு சீல்
சேலம் மாணவி உயிரிழப்புக்கு காரணமான போலி மருத்துவர் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Recommended Video
சேலம்: சேலம் அருகே கருக்கலைப்பு செய்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கருக்கலைப்பு செய்த போலி டாக்டரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்ய முயன்றதால், உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவ அதிகாரி சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், சுல்தானா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஓமலூர் வட்டாட்சியர் பெரியசாமி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் சுல்தானாவின் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
மேலும் சேலம் மாவட்ட மருந்துக் கடைகளில் கருக்கலைப்புக்கான மாத்திரைகள் மருத்துவரின் சிபாரிசு இல்லாமலே வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கும் மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில், கொசுக்கள் பெருகி விட்டது போல், போலி டாக்டர்களும் பெருகி விட்டனர். பள்ளிக்கூட படிப்பைக்கூட முடிக்காதோர் எல்லாம் டாக்டர் என்ற பட்டத்துடன், கிளினிக் தொடங்கி மனித உயிர்களில் விளையாட ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு எதிரான களையெடுப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும், சமூக விரோதிகளான, இவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், உயிர் இழப்புக்கள் தவிர்க்க முடியாததாகி விடும் என்பதை மாணவி உயிரிழப்பின் மூலமாவது உணர வேண்டும்.