சூடு பிடிக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் - எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் அலுவலகங்களுக்கு “சீல்”!
சென்னை: தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர்களின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிட்டது. இதில் தமிழகம், புதுச்சேரி சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19 ஆம் தேதி நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இதையொட்டி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு இருந்த சோதனைச் சாவடிகள், கண்காணிப்புக்கான பறக்கும் படைகள் உடனடியாக செயல்படத் தொடங்கியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவில் ஆங்காங்கே சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர்களும் தற்போது அரசு கார்களை உபயோகப்படுத்தாமல் தங்களது சொந்த காரிலேயே சென்று வருகின்றனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, தலைவர்கள், கவுன்சிலர்கள் அலுவலகங்களையும் காலி செய்து சீல் வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு இன்று 1 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு பதவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்களது சொந்த அலுவலகங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களின் அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டதற்கு அரசு அலுவலகங்களில் கட்சி பிரமுகர்கள் வந்து அரசியல் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.