தஞ்சையில் சீல் வைத்த வாக்குப்பதிவு எந்திரம் திறப்பு: மறுதேர்தல் நடத்த டி.ஆர்.பாலு கோரிக்கை!
தஞ்சை: தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மண்டல அலுவலர் மணிகண்டன், வாக்குப் பதிவு எந்திரத்தின் சீலை திடீரென உடைத்தார். இதனை அந்த வழியாக சென்ற முகவர் ஒருவர் பார்த்துவிட்டு மற்ற வாக்குச்சாவடிகளில் இருந்த திமுகவினருக்கும், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த டி.ஆர்.பாலு மற்றும் திமுகவினர் அந்த அதிகாரியை கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த டி.எஸ்.பி. சுகுமாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அப்படி இருக்க வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்ட பிறகு ஒரு பெட்டியை ஜோனல் ஆபீசல் திறந்துள்ளார். இந்த செயல் தவறானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது.
மேலும், அந்த பெட்டியை எதற்காக அந்த அதிகாரி திறந்தார் என்று தெரியவில்லை. எனவே, அந்த பகுதியில் மட்டும் மறுவாக்குப் பதிவு வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.