39 காட்டேஜ்களுக்கும் சீல் வைக்கும் பணி ஆரம்பம்.. நீலகிரி கலெக்டர் அதிரடி
காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஊட்டி: உச்சநீதிமன்ற உத்தரவிட்டபடி, நீலகிரியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மசினகுடி, உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாடும் பகுதிகளில் ரிசார்ட்களை கட்டி விட்டுள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை கணக்கெடுத்து சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சில உத்தரவிட்டிருந்தனர்.
நோட்டீஸ் ஒப்பட்டப்பட்டது
அதன்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நேரடியாக சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார். அத்துடன் உடைமைகளை எடுத்து கொண்டு காட்டேஜ்களை விட்டு வெளியே ஒருநாள் நேரம் கொடுத்தார். மேலும் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது யானைகள் வழி தடத்தில் உள்ள 39 காட்டேஜ்கள், விடுதிகள், கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.
சீல் வைக்கும் பணி ஆரம்பம்
மசினகுடி அருகே உள்ள கரடிமலையில் டேவிட் பிலிப்ஸ் என்பவருக்கு சொந்தமான தேரா மவுன்ட் என்ற ரிசார்ட்டில் முதல் சீல் வைக்கப்பட்டு, பிறகு ஒவ்வொரு காட்டேஜுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெறும். இன்று மாலைக்குள் முறைகேடாக கட்டப்பட்டுள்ள காட்டேஜ்களுக்கும் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டுவிடும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கூறப்படுகிறது.
கூட்டம் கூட்டமாக வாழும்
இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். அத்துடன் இன்று சர்வதேச யானைகள் தினம் வேறு. யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என்பதை உச்சநீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருவதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருவது பாராட்டுக்குரியதாக உள்ளது. பொதுவாக யானைகள் தனியாக வாழக்கூடியவை அல்ல. எப்போதுமே கூட்டம் கூட்டமாகவே அவை வாழ்ந்து பழக்கப்பட்டவை.
மனிதாபிமானம் அவசியம்
யானைகள் நடமாடும், வாழும், இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் என வனத்துறை பகிரங்கமாக அறிவித்தும், சிலர் பணத்திற்காக சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டி செயல்படுவதை இனியாவது நிறுத்த வேண்டும். மனித இனம் போன்றே மற்ற உயிரினங்களும் இப் பூவுலகில் வாழ்வதற்கு வரம் பெற்றுள்ளன என்பதனை, கோலோச்சும் பணத்தாசை பிடித்தவர்களும், மனிதாபிமானமற்றவர்களும் வருங்காலத்தில் நினைத்து பார்ப்பது அவசியம்.