மாயமான 'டோர்னியர்' விமானத்தின் கறுப்பு பெட்டி சென்னை வந்தது- மர்மம் விலகுமா?
சென்னை: காணாமல் போன டோர்னியர் ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகைக்காக சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக குட்டி விமானம் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி சிதம்பரம் கடல் பகுதியில் 16 கடல் மைல் தூரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென்று மாயமானது.
விமானத்தில் பயணம் செய்த வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய விமானிகளும் அதில் மாயமானார்கள். இதையடுத்து, கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் சேர்ந்து மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடி வந்தன.
ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் பலனாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பிச்சாவரம் அருகே ஆழ்கடலில் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியை கரைக்கு கொண்டு வரப் பட்டு, பின்னர் அது ஆய்வுக்காக சென்னை கொண்டு வரப்பட்டது
அதனை ஆய்வு செய்ய பெங்களூரில் உள்ள, 'இந்துஸ்தான் ஏரோடைனமிக்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்றும் சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலுக்கு அடியில், 30 நாட்களுக்கும் மேலாக கிடந்ததால் கறுப்பு பெட்டியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது நிபுணர் குழுவின் ஆய்வில் தெரிய வரும். அதன் பின்னரே, கறுப்பு பெட்டியை, 'டி - கோடு' செய்ய, எங்கு அனுப்புவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தக் கறுப்பு பெட்டியின் மூலமாகவே டோர்னியர் விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது, அதில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை என்ன என்பது குறித்து பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.