வண்டலூரில் மாயமான புலி.. புதரில் பதுங்கிக் கொண்டு போக்கு காட்டுகிறது: சென்னையில் 2வது நாளாக பீதி!!
சென்னை : சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிச் சென்ற 'நேத்ரா' புலி அருகே உள்ள புதரில் பதுங்கிக் கொண்டு கூண்டுக்குள் செல்ல மறுத்து வருகிறது. இதனால் சென்னையில் 2வது நாளாக பீதி நீடிக்கிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் சுமார் ஆயிரத்து 490 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 46 வகை விலங்குகள் சுமார் 400-ம், 74 வகை பறவைகள் சுமார் 750-ம், 32 வகை ஊர்வனற்றில் சுமார் 350 உள்ளன.
இதில், வங்கப்புலிகள் என்று அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப்புலிகள் 12, கலப்பின புலிகளான வெள்ளைப்புலிகள் 14 உள்ளன. இவற்றில், 5 பெண் புலிகள் மட்டும் வசிப்பதற்கு வசதியாக ஒரு கூண்டுடன் கூடிய அடர்ந்த காட்டுப்பகுதி சுமார் 5 ஏக்கரில் உள்ளது. இதற்கு அருகில் ஒருபுறம் மான் சரணாலயம், ஒரு புறம் சிங்கத்தின் வசிப்பிடம், மற்றொரு புறம் பறவைகள் வசிக்கும் இடம் ஆகியவை உள்ளன.
சுவர் இடிந்தது...
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் புலிகள் இருந்த பகுதியில் இருந்த சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
தப்பியோடிய புலிகள்...
இதனால் அங்கு இருந்த ஐந்து புலிகள் அருகிலிருந்த காட்டிற்குள் தப்பி ஓடின. இதனைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் நடத்திய தேடுதல் வேட்டையில் நான்கு புலிகள் பிடிபட்டன.
நேத்ராவைக் காணவில்லை
ஆனால் நேத்ரா என்ற ஒரு 2வயது புலி மட்டும் பிடிபடவில்லை. மாயமான நேத்ரா புலியைத் தேடும் பணி நேற்று பகல் முழுவதும் நடைபெற்றது. அப்போது மாயமான புலி அருகிலுள்ள புதர் ஒன்றில் மறைந்திருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். ஆனாலும் புலி சிக்கவில்லை. இரவு நேரமானதால் புலியைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
2வது நாளாக தேடுதல் வேட்டை
இந்த நிலையில் இன்று காலை முதல் 2வது நாளாக மாயமான புலியைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்கு காட்டும் நேத்ரா புலி
தப்பி ஓடிய நேத்ரா பூங்கா வளாகத்திலேயே அடர்ந்த ஒரு புதரில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதை கூண்டுக்குள் விடுவதற்காக இறைச்சி உள்ளிட்டவற்றை பூங்கா ஊழியர்கள் வைத்தும் பார்த்தனர். இறைச்சியை தின்றுவிட்டு மீண்டும் புதருக்குள் பதுங்கிக் கொண்டு போக்கு காட்டி வருகிறது நேத்ரா புலி. இதனால் பூங்கா ஊழியர்கள் தாய் புலியை வைத்து நேத்ராவை கூண்டுக்குள் அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பார்வையாளர்கள் தகராறு
இதனிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களுக்கு புலிகளைப் பார்வையிட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பார்வையாளர்களோ புலியைப் பார்த்தாக வேண்டும் என்று தகராறு செய்தனர். இதனால் வேறு வழியின்றி கூண்டில் இருந்த 4 புலிகளில் ஒரு புலியை மட்டும் வெளியே உலாவ விட்டு சமாதானப்படுத்தினர்.
2வது நாளாக தொடரும் பீதி
இன்றும் தப்பிய புலியை கூண்டுக்குள் அடைக்க முடியாமல் போனதால் சென்னையில் 2வது நாளாக பீதி தொடருகிறது.