பிக்கப் ஆகும் குற்றாலம் சீசன்.. குவியும் அரிய வகை பழங்கள்.. குஷியில் சுற்றுலா பயணிகள்!
குற்றாலத்தில் அரிய வகை பழங்கள் குவிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை: குற்றாலத்தில் சீசன் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் கடை வீதிகளில் நேரத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். அதனால் இங்கே உள்ள பழக்கடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இங்கு மலைப்பகுதியில் விளையும் அரிய வகை பழங்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதியில் மங்குஸ்தான், ராப்பட்டான், துரியன் பழங்கள் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இது தவிர பெங்களூரா, இமா்ம் பசந்த், நீலம் உள்ளிட்ட மாம்பழ வகைகள், நாடு, பச்சை, கதலி, கற்பூரவல்லி, மலை வாழை, பூவன், நேந்திரம் உள்ளிட்ட வாழை பழ வகைகளும், கொய்யா, பன்னீர் கொய்யா, நெல்லி, காட்டு நெல்லி, நாவல் பழம், மனோரஞ்சிதம், அத்தி, பிளம்ஸ், செர்ரி பழங்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்காகக் குவிந்து வருகின்றன.
இவற்றில் மங்குஸ்தான், ராப்ட்டான், துரியன் வகை பழங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. துரியன் பழங்கள் மலட்டு தன்மையை நீங்கும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பதால் இது அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது.
மங்குஸ்தான் கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது. ரப்ட்டான் கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. தற்போது சீசன் ஆரம்ப நிலையில் இருப்பதால் விற்பனை சூடு பிடிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது விற்பனை நல்ல நிலையில் இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.