குற்றாலத்தில் சீசன் தொடங்கியது! அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பிரவாகம்!!
நெல்லை: குற்றாலத்தில் நடப்பாண்டுக்கான சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டில் ஜூன் 1ம்தேதி சீசன் தொடங்கிய நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் தாமதத்தால் சீசன் நேற்று தொடங்கியது.
சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக கடந்த சில நாட்களாகவே தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து குளிர்ந்த காற்றுடன், மிதமான சாரல் பெய்தது.
நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது சாரலும், இடையிடையே லேசான வெயிலும், சில நேரங்களில் இரண்டும் கலந்து இதமான சூழலும் நிலவியது.
இதையடுத்து பேரருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றும், இதமான சாரலும் நிலவியது.
இன்னும் இரண்டு நாட்களில் சீசன் மேலும் களைகட்டும் என்பதால் சுற்றுலா பயணிகளை எதிர்நோக்கியுள்ளது குற்றாலம்.