தமிழக சட்டசபையில் முன் இருக்கை தரப்பட்ட 'குறிப்பிட்ட ஊடகங்களுக்கு' பின் இருக்கை ஒதுக்கீடு
சென்னை: சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில் சட்டசபையில் குறிப்பிட்ட பத்திரிகை மற்றும் டிவி சேனல் நிருபர்களுக்கு, திடீரென முன்வரிசையில் இருந்து பின்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த ஊடகங்களுக்கு இதுகுறித்து காரணம் தெரியவில்லை.
சபாநாயகர் இருக்கைக்கு பக்கவாட்டில் தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் தினமலருக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று சட்டசபை கூடிய நிலையில், தினமலருக்கு 54வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நீண்ட காலம் பாரம்பரியம் கொண்ட பத்திரிகைகளுக்கு தரைத்தளத்தில் முன்வரிசையிலும், புதிய ஊடகங்களுக்கு மாடத்திலும் இடம் ஒதுக்கப்படும். ஆனால் இப்போது தினமலர் மாடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சன், கலைஞர்
இதேபோலவே, இதுவரை தரைத்தளத்தில் இடம் தரப்பட்டிருந்த, டைம்ஸ் ஆப் இந்தியா, சன் டிவி, கலைஞர் டிவி ஆகியவையும் மாடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
குழுவிற்கு தெரியலை
பத்திரிகைகளுக்கு இடம் ஒதுக்குவது சபாநாயகர் அதிகார வரம்புக்கு உட்பட்டது. சபாநாயகருக்கு ஆலோசனை வழங்க மூத்த பத்திரிகையாளர்கள் அடங்கிய ஆலோசனை குழு உள்ளது. ஆனால் இந்த குழுவிற்கே தெரியாமல் இம்முறை இடமாற்றம் நடந்துள்ளதாம்.
சகஜம்
இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறுகையில், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பத்திரிகையாளர்களின் இருக்கைகள் மாற்றப்படுவது வழக்கமானதுதான். இதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன
தேர்தல் நேரத்தில் தினமலர், நியூஸ்7 இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுக வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த கணிப்பை மீறி அதிமுக வெற்றி பெற்றது. இதேபோல, சன்டிவி, கலைஞர் டிவி ஆகியவை அதிமுகவுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் சீட் மாற்றப்பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.