உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்று தாக்கல் செய்யவில்லை
உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யவில்லை.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.
ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரம், தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிபதிகளாகிய நாங்கள் உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து விசாரணையை ஆகஸ்டு 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் தேர்தல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணைகள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்றும் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை.
வார்டு மறுவரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால் தாக்கல் செய்யவில்லை என்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கும்படியும் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் வார்டு மறுவரையறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.